மரம் நடும் மறத்தமிழர் மரபு

தெய்வத்தொண்டைக் காட்டிலும் மேன்மைமிக்கது தேசத்தொண்டு. சிறுபஞ்சமூலம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். சிறுபஞ்சமூலம் என்பது, கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி முதலிய ஐந்து பொருள்களின் கலவை என்பர். இம்மருந்துகள் மக்களின் உடல் நோயைப் போக்குவது போல், சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மக்கள் மனதைச் சுத்தம் செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பொருள்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கும்.

“”வார் சான்ற கூந்தல் வரம்பு உயர; வைகலும் நீர் சான்று உயரவே நெல் உயரும்: சீர்சான்ற தாவாக் குடி உயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும் ஓவாது உரைக்கும் உலகு”. இப்பாடலின் கருத்து: நீண்ட கூந்தலை உடைய பெண்ணே நிலத்திலே நீர் தங்கும் படியாகக் கரை உயர்ந்திருக்க வேண்டும், கரை உயர்ந்து காணப்பட்டால் தான் குளத்திலே நீர் தேங்கி இருக்கும். நிலத்தடி நீர் குறையாது. தண்ணீர் தேங்கி இருந்தால் தான் வேளாண்மைப் பயிர் செய்ய முடியும். நெற்பயிர் ஓங்கி செழித்து வளர்ந்தால் தான் குடிமக்கள் யாவரும் பஞ்சம், பசியின்றிப் பல
செல்வங்கள் பெற்றுச் செழுமை யுடன் வாழ்வார்கள். நாட்டின் குடிமக்கள் சிறந்து வாழ்ந்தால் தான் அந்நாட்டு மன்னனும் உயர்வாக மதிக்கப்படுவான், அவனது அர சாட்சியும் சிறந்து விளங்கும் என்பதாகும்.

தரிசு நிலங்களைத் திருத்தி, கழனிகளாக்கி நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தான் அந்நாட்டில் பஞ்சம் என்பதே இருக்காது. மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள். அதனால், காடுகளை அழித்து விடக்கூடாது. அவற்றைப் பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்று நமது பழந்தமிழ் இலக்கியங்களிலே  சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும் அக்குழந்தையின் நினைவாக ஒரு மரம் நடுவது நமது தமிழ்நாட்டின் மரபாகவே இருந்து வருகிறது.

தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். திருமண நாளில் உதிமரம் நட்டு வளர்ப்பதும்,  ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் நாளில் ஐந்து பால்தரும் மரங்களை நட்டுப் பயிர் செய்ய வேண்டும் என்பதும் நம் தமிழரின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. புலவர் காரியாசான், நாடு நன்றாக வாழ, நாட்டிலே நீர்வளம் குறையாது உணவு உற்பத்தி பெருக, மக்கள் மகிழ்வோடும் ஒற்றுமையோடும் வாழ நல்ல கருத்துகளை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடியிருப்பது போற்றத்தக்கதாகும்.

“குளம் தொட்டுக்கோடு பதிந்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி
வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு,
என்று இவ்ஐம்பால் படுத்தான் ஏகும் சுவர்க்கத்து இனிது” (பா66).

“நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடில் லாமல் இருக்க பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும். (நீர்ப்பாசனம்):தளிர்விட்டு வளரக்கூடிய மரக் கிளைகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். (பசுமைப்புரட்சி), மக்கள் நடக்க முள்<<<, முடல் இல்லாத பாதைகளை மேடு பள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும். (சாலை வசதி), தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி விளைநிலங்களாக மாற்ற வேண்டும். (தரிசு நில மேம்பாடு); சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும். (குடிநீர் வசதி), இந்த ஐந்து அறப் பணிகளையும் தேசத்திற்காக எவன் செய்கிறானோ அவன் சொர்க்கம் சென்றடைவான்’ என்கிறது சிறுபஞ்சமூலப் பாடல்.
சிறுபஞ்சமூலம் கூறும் இக்கருத்துகள், இந்நாளில், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துகள் தானே?
(செய்தி ஆதாரம்  07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் கா.காளிதாஸ் என்பவர் எழுதியுள்ளார்)

0 மறுவினைகள் to “மரம் நடும் மறத்தமிழர் மரபு”



  1. பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக