Archive for the 'Uncategorized' Category

11 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பூம்புகார்

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas  என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

(இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010).

தொல்காப்பியர் காலம் கி.மு.711

தொல்காப்பியர் நாள் சித்திரை மாதம் முழுமதிநாள் (சித்திரா பௌர்ணமி) என்றும், அவரது கால எல்லை கி.மு.711 என்றும் தமிழறிஞர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் திருமடத்தில் கோவிலூர் ஆதீனம் மற்றும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் ஆகியன சார்பில் தொல்காப்பியர் காலத்தை நிர்ணயம் செய்வதற்காக தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. (2009 டிசம்பர் 26 முதல் 28 வரை)
இக்கருததரங்கு தொடக்க விழாவில் கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் தமிழ்ண்ணல், பேராசிரியர் ஆறு.அழகப்பன், செம்மொழித் தமிழாய்வு மையப் பொறுப்பு இயக்குனர் க.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் புலவர் த.சுந்தரராசன் எழுதிய “தொல்காப்பியர் காலம்’ என்ற நூலும், “தொல்காப்பியர் கால ஆய்வுக் கருத்தரங்கு மலரும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் 5 அமர்வுகள் நடைபெற்றன. புலவர் அரங்கசாமி, முனைவர் லெட்சுமி  நாராயணன், புலவர் வெற்றியழகன், புலவர் இளங்குமரனார் ஆகியோர் தொல்காப்பியர் காலம் குறித்த 27 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். எண் பேராயக்குழு உறுப்பினர் பாவலர் வா.மு.சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கை முனைவர் ஆறு.அழகப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

(நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010)

தமிழ் மணக்கும் சிங்களம்

காலஞ்சென்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய தமிழீழம் நூலில் “இலங்கையின் வரலாற்றுப் பின்னணி’ என்ற முதல் அத்தியாயத்தின் ஒரு பகுதியை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்.
பழந்தமிழ் நாடு, செந்தமிழ்நாடும் கொடுந்தமிழ் நாடும் என இரு பிரிவாகப் பிரித்து பேசப் பெற்றது. அவற்றை மருவிச் சூழ்ந்துள்ள நாடுகள் பதினேழு என்று குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைக்
கீழ்வரும் பழம் பாடலால் அறியலாம்.

சிங்களம் சோனகம் சாவகம்
சீனம் துளுக்கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கு கலிங்கவங்கம்
கங்கம் மகதம் கவுடம்
கடாரம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி
னேழ்புவி தாமிவையே!

ஈழம் என்பது சிங்களத்தின் மாற்று பெயராகும். சிங்களம் என்னும் பெயர், சிங்கவாகுவின் மகன் விசயன், தன் தந்தையின் பெயரடிப்படையாகக் கொண்டு அøத்ததென்பது பொருந்தாது. சிங்கவாகுவின் மகன் இலங்கைக்கு வந்தது இன்றைக்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்.

ஆனால் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாரதத்தில் சிங்களம் என்னும் பெயர் வந்துள்ளது. இப்பெயர் அங்குப் பேரளவில் விளையும் கறுவாப்பட்டையால் வந்தது என்பதே பொருந்துவதாகும்.

இலக்குமன் இராமச்சந்திர வைத்திய பண்டிதர் என்பார் எழுதிய சமற்கிருத  ஆங்கில அகர முதலியில் சிங்களத் துவீபம் என்பதற்குப் பட்டைத் தீவு என்றே பொருள் தரப் பெற்றுள்ளது.
இனி, சிங்களம் என்னுஞ் சொல்லால் இந்நாடு குறிக்கப் பெறுவதை விட, இலங்கை, ஈழம் என்னுஞ் சொற்களால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப் பெறுவதே பெருவழக்காக உள்ளது.

“தொல்லிலங்கை கட்டழித்த  சிலப். 2,35:3. “பெருமா விலங்கை  புறம்: 1786. “இலங்கைக் கிழவோன்’  புறம்: 3766. “தொல்மா விலங்கை’  சிறுபாண்  119. “இலங்கையில் எழுந்த சமரம்’  சிலப். 2538. “ஈழத்துணவு’ பட்டினப்191. “ஈழம்’ முத்தொள். 263.
முதலிய குறிப்புகளால் இதனை உணரலாம். சேர மண்டிலம், சோழ மண்டிலம், பாண்டிய மண்டிலம், தொண்டை மண்டிலம் என்று மண்டிலப் பெயர் கொண்டு வழங்கும் நாடுகளுள் ஈழ மண்டிலம் என்பதும் ஒன்றாகப் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப் பெறுகிறது.

விசயன் இலங்கைக்கு வந்த கி.மு. 543க்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே, அந்நாடு தமிழ் மக்கள் குடி கொண்டிருந்த நாடாக இருந்தது என்பர் பெர்டோலாக்கி (Bertolocei) பென்னட் (Bennet) ஆகிய  ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், அந்நாட்டில் வழங்கும் பல ஊர்களின் பெயர்கள் இன்னும் தூய தமிழ்ப் பெயர்களாகவே விளங்குகின்றன.

எடுத்துக் காட்டாக பாலாவி, மாதோட்டம், மாந்தை, சிலாபம், குசலை, உடைப்பு, ஆணை மடு பள்ளம், கற்பிட்டி, குதிரை மலை, வில்பற்று, முசலி, மன்னார் மூதூர், கந்தளாய், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி, பச்சிலைப் பள்ளி, கரைச்சிக் குடியிருப்பு, முள்ளிய வலை, குமணை, உகந்தை, அம்பாறை, நல்லூர், அரிப்பு, வெருகல் (ஆறு), பருத்தித்துறை, புத்தளம், வதுளை, கண்டி, கதிர்காமம், கொழும்பூ (இதுவே பின்னர் கொழும்பு என்றானது), சிலாத்துறை, சுண்ணாகம், செம்பியன் பற்று, ஆனையிறவு, கிளி நொச்சி, முல்லைத் தீவு, மண்டைத் தீவு, வேலணை, காரைத் தீவு, எழுவைத் தீவு, அனலைத் தீவு, புங்குடு தீவு, (இது பொன் கொடு தீவு என்பதன் மருவாதல் வேண்டும்) நெடுந்தீவு, பாலைத் தீவு,மாங்குளம், அருவியாறு, ஆனைமேடு, களுத்துறை, அலம்பில் வப்புவெளி, செங்கலம், கோட்டை முனை, பொலனறுவை, மட்டகளப்பு, தும்பளஞ்சோலை, அக்கறைபற்று, வெளிமடை, அப்புத்துளை, வெல்லவாய், புத்தளை, கருக்குப்பனை, முந்நூல், அறுகும்குடா, அம்பாந்தோட்டை, தேவுத் துறை, பாணன்துறை, கமம் முதலிய பரவலான எண்ணிறந்த ஊர்கள் தூய தமிழ்ப் பெயர்களே!

மேலும் இவற்றுள் பல பெயர்கள் பண்டைக் காலந்தொட்டே அங்கு வழங்குகின்றன. தேவாரத்தில் பாலாவி, மாதோட்டம், மாந்தை, திரிகோணமலை, திருக்கேதீசுவரம் முதலிய பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன.

இலங்கையில் பண்டையில் ஆண்ட  சோழ, பாண்டிய அரச வழியினர் மாதோட்டத்தில் கட்டியிருந்த கோட்டை மிக்க வலிமையும் அழகும் வியப்பும் உடையதென்றும், பெருமாக்கலங்கள் மன்னார் கடலில் வருமாயின் அவற்றைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் காந்தப்பொறிவுடையதாய் இருந்தென்றும் கூறுவர்.

(பார்க்க தமிழ்ச் சங்கமும் ஈழநாடும்  கட்டுரை  செந்தமிழ் தொகுதி 8  பகுதி 10) . உரோமர் இலங்கையிலே வாணிகம் செய்த காலத்திலேயே தமிழர் மாதோட்டத்தைத் தலைநகராக் கொண்டு அரசு செய்தார்கள் என்னும் செய்தி குறிக்கப் பெறுகிறது. Journal Of the Royal Asiatic Society – Ceylon Branch. 1848. P. 73. மேலும் பண்டை நாகர்களுக்கும் இலங்கைக்கும் பெருந்தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப் பெறுகிறது. நாகர்கள் ப ழந்திராவிடர்கள். இராவணன் நாகர்கள் மரபில் வந்தவனே என்பர். ஒரு காலத்தில் நாகர்கள் இலங்கையிலிருந்து இமயம் வரை ஆட்சிசெய்தனர். என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
இலங்கை விசயனால் ஆளப்படுவதற்கு முன்னரே, அங்கிருந்த அரசர்கள் நாகராயர் என்னும் பெயரைப் புனைந்திருந்தனர் என்றும் தெரிய வருகிறது. (Sketches of Ceylon History). இலங்கையிலும் தமிழகத்திலும் நாகபுரம்,  நாகர்கோயில், நாகப்பட்டினம் முதலிய பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் உண்டு. ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் சிங்களவர்களால் நாகத்தீவு என்றே வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அரசிழந்த நாகர்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வித்னைப் பகுதியிலும் நயினார் தீவிலும் போய் ஒதுங்கியிருந்தார் என்பர். மேலும் முதற்கழகப் புலவர் முடி நாகராயர் என்பாரும், ஈழத்துப் பூதந் தேவனார் என்பாரும், இறையனாராகப் பொருளுரைப் பாடங்கேட்ட இளநாகர் என்பாரும், அவர் மாணவர் நீலகண்டனாரும் ஈழநாட்டுப் புலவர்களாதல் வேண்டும் என்று அறிஞர் பலர் கருதுவர்.

யாழ்ப்பாணத்துக்கு மணற்றி என்றொரு பெயரும் உண்டு. இன்றும் மாந்தையிலும், மணற்றியிலும் பாண்டியர் போர் புரிந்து பெற்ற கொற்றமும் இறையனார் அகப்பொருட் கோவையிற் கூறப்பெறுகின்றது.

மாந்தை என்பது மாதோட்டத்துக்கு அண்மையில் உள்ள ஊர். மணற்றி என்பது மணல் மேடு என்றும் மணற்றிடல் என்றும் ஒரு காலத்தில் வழங்கப் பெற்றதாகத் தெரிகிறது. இஃதொரு காலம் இலங்கையரசர் பாண்டியரொடும் சோழரொடும் பொருதிய போர்க்களமாக விருந்தது. இதன் பகுதிகளுள் ஒன்று இன்றும் களபூமி என்னும் பெயரால் வழங்கும் மாந்தையிலும் மணற்றியிலும் கி.மு.103ல் ஒரு பெரியபோர் நடந்ததென்றும், அப்போரில் பாண்டியர் வாலகம் பாகுவைப் புறங்கண்டு அவனது மனைவியையும் புத்தகலத்தை (பாத்திரத்தையும் கவர்ந்து கொண்டு போனதுடன், ஈழநாட்டையும் தமதடிப்படுத்திப் போயினர் என்றும் மகாவம்சம் கூறுகிறது.

“”இன்னும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ஈழ நாட்டார் எனப்படுவார். அவர் குணபூசண சிங்காரிய அரசர்க்கு அமைச்சராயிருந்து, ஈழ நாட்டில் பல அறச் சாலைகளும், கல்விக் கூடங்களும் அமைத்தார். அஃது அடியார்க்கு நல்லார் குளமென வழங்குகின்றது. அது வண்ணைச் சிவன் கோவில் சந்நிதித்தெருவில் உள்ளது. அதற்கயலிலே அவர் தம் அரசன் பெயராற் அமைப்பித்த குளம் ஆரிய குளம் என இக்காலத்து வழங்குகிறது.

அவர் இருந்த மனை நிலமும் அவர் பெயராலேயே வழங்குகின்றது. அவர் காலத்தில் யாழ்பாணத்தில் தமிழர் மிகப் பேரளவில் இருந்தனர். அவரே அறுபத்து மூன்று நாயன்மார்கள் கோவிலும், பூசைக் கட்டளையும் வகுத்தவர். அக்கோவில் இருந்த இடம் “நாயன்மார்கட்டு’ என்று இன்றும் வழங்குகின்றது.
அடியார்க்கு நல்லார் நிரம்பை என்னும் ஊரில் பிறந்தவர்” (தமிழ்ச் சங்கமும் ஈழ நாடும்  கட்டுரை. “செந்தமிழ் தொகுதி 8; பகுதி 10).
மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள செம்பியன் பற்று,
பல்லவராயன்கட்டு, தொண்டைமானாறு, பாண்டியன் தாழ்வு முதலிய இடப் பெயர்களை நோக்குமிடத்துத் தமிழ்நாட்டு வேந்தர்கள் யாழ்ப்பாணத் தொடர்புடையவர்களாயிருந்தனர் என்பது நன்கு துணியப்படும். இன்னும் மாதோட்டத்துக்கு தெற்கேயுள்ள குதிரை மலை மிக்க பழமையும், யவன நாடுவரையும் பரந்த புகழும் உடையது. அஃதொரு காலம் சிற்றரசருள்ளே எழினியும் பிட்டங்கொற்றும் புறநானூற்றில் பாடப்பட்டோராவர். (மேற்படி கட்டுரை).

இவ்வாறான பல இலக்கிய வரலாற்றுச் செய்திகளால், இலங்கையைத் தொடக்கத்தில் தமிழினத்தவரின் முன்னோர்களே ஆண்டிருந்தனர் என்பது உறுதியாகிறது.

தமிழரின் விழாக்களும், விளையாட்டுக்களும்

தமிழர்களாகிய நாம் இன்றைக்கு பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறோம். இதே போல முற்காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட விழாக்கள் என்னென்ன என்பதை அறிவதற்கு சங்கப்பாடல்கள் தான் நமக்கு பெரிதும் துணை புரிகின்றன.
அவற்றின் மூலம் தமிழர்கள் கொண்டாடிய விழாக்களை ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர்க்கு இந்திராவிழாவைப் பற்றித் தெரியும்.

பாண்டிய மன்னன் குடுமிப் பெருவழுதி என்பவன் கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா என்ற விழாவை நடத்தியிருப்பது “”குடுமிதங்ககோ முந்நீர் விழவின் நெடியோன்… நன்னீர்ப் பஃறுளி” என்ற பாடல் வரி மூலம் தெரிகிறது.

திருமணங்களை அந்நாளில் “வதுவைவிழா’ என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். மாங்குடி கிழார் பாடல் மூலம் அவ்விழாவில் புதியராய் வந்தோர் சிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதுதவிர சிறுசோற்றுவிழா, பெருஞ்சோற்றுவிழா, வில்விழா போன்ற பல்வேறு விழாக்களும் அக்காலத்தே நடைபெற்றுள்ளன.

அது மட்டுமா? ஆறுகளில் புது வெள்ளம் வரும் போது புதுநீர் விழா, தை மாதத்தில் தைந்நீர் விழா மற்றும் உள்ளி விழா, சித்திரை மாத இந்திர விழா முதலிய விழாக்களையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
விழாக்காலங்களில் பல்வேறு விளையாட்டுக்களிலும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சி நிலச் சிறுவர்கள் புற்களால் வில், அம்பு செய்து ஆடும் விளையாட்டு, முல்லை, மருத நிலத்து சிறுவர்களின் குளித்துமணல் கொண்டு விளையாடும் விளையாட்டு, நீர்நிலைகளில் இளம் பெண்கள் ஓரையாடுதல், வீடுகளில் அம்மானை பந்தாட்டம், நெய்தல் நிலச் சிறார்களின் கடலாட்டம், பெண்கள் கடற்கரைகளில் மேயும் சிறு நண்டுகளை பிடித்தாடுதல் போன்ற விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன.

பாலை நிலத்து சிறுவர்களோ வட்டாடுதலிலும் முல்லை நிலத்து மக்கள் ஏறு தழுவுதல் மற்றும் யானை, ஆடு, கோழி போன்றவற்றை மோதவிட்டு வெற்றி கண்டு இன்புற்றுள்ளனர் என்பதும் அப்பாடல்களில் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைக்கு இந்த விழாக்களும், விளையாட்டுக்களும் வடிவம் மாறியும் முறைகள் மாறியும் புழக்கத்தில் இருக்கலாம். சில மறைந்தும் இருக்கலாம்.  ஆனால் ஏறு தழுவுதல் போன்றவை இன்றும் தமிழர்களிடையே நீண்ட கால தொடர்ச்சியாகநடைமுறையில் இருக்கிறது. காலங்காலமாக இந்த விழா தமிழர்கள் மத்தியில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வளர்த்த ஐரோப்பியர்

 (தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலைநாட்டு அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இது பற்றி “தமிழ் இலெமுரியா’ மாத இதழில் (2010, மார்ச் 15 ஏப்ரல் 14) தமிழ் மொழி காத்த ஐரோப்பியர்கள் என்ற தலைப்பில் மணவை வே.வரதராசன் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்)

அமிழ்துக்கு அமிழ்தென்றுதான் நிலைப் பெயர். தமிழுக்கும் அமிழ்தென்று பேர் என உவமையோடு தமிழை அமிழ்தாக்கி அதன் சுவையை உணர்வோடு ஊடுருவ விட்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் சிறப்பை நாம் அம்மொழியின் வழித்தோன்றலாக வந்ததனால் மட்டும் பெருமையோடு கூறவில்லை; அந்நியர்களாகிய ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை கொள்ள வந்த போது தமிழ் மொழியின் வளத்தையும், பொலிவையும் கண்ணுற்று வியந்து போற்றியுள்ளனர். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே அதன் சிறப்பை உணரச் செய்து, வட மொழித் துணையுடன் வளர்ந்தமொழி தமிழ் என்னும் தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் வழிகோலிய பெருமை, மேலை நாட்டு நல்லறிஞர்களையே சாரும். உலகோர் கருத்தினிலும் தமிழ் மொழியின் மேன்மையை இடம் பெற வைத்தனர். அவர்கள் சமயத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்தவர்களாயிருப்பினும், தமிழ் மொழியின் இனிமை, மாட்சி, சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றைக் கற்றுணர்ந்து தங்கள் வாழ்நாளைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே கழித்தனர். தமிழ் இலக்கியங்களில் கண்ட இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு ஆகியவற்றை கற்றுத் தெளிந்தனர். தமிழ்மொழியை முதன்முதலாக அச்சில் ஏற்றிப் பல நூல்களையும், சிற்றிதழ்களையும் வெளியிட்டனர். உரைநடையில் சொற்களைப் பிளந்து எழுத வழிகாட்டினர். மேல்நாட்டு மொழிகளுக்கொப்பத் தமிழ் அகராதியையும் இயற்றினர். அவர்கள் வரவு தமிழ்மொழிக்கே ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறலாம். அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

சீகன் பால்கு

16831705 இல் கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார். தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார். அவர் தொகுத்த செய்யுள் (சொல் பொருள் நூல் ) அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன. நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில்பெயர்த்துள்ளார். ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிஃஷப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.

கிரன்ட்லர் பாதிரியார்

 இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார். இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.

ராபர்ட டி நோபிலி

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார். தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டார். அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, கையிலே கமண்டலம், காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார். சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார்.

வீரமாமுனிவர்

 இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி 1711ம் ஆண்டு தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார். அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார். பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார். தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.

டாக்டர் வின்சுலோ

 கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.

டாக்டர் கால்டுவெல்

 இவர் கி.பி. 1838 ல் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திராவிட மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார். வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும். தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார்.

ஜியுபோப்

 இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். சமயப் பணிக்காக 1839 ம் ஆண்டு தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார். யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார். இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

கமில்ஸ் சுலபில்

 இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம். ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது. தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்றஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்களும் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர்.

எனவே ஐரோப்பியர் ஆதிக்கத்தை தமிழகம் பெற்றாலும் அதற்கு முன்னர் நடந்த மொழியழிப்பு ஒழிந்து உள்ள நிலையிலிருந்து தமிழை ஓங்கி வளரச் செய்தனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டோ, தமது சமய வளர்ச்சி நோக்கத்தோடோ, மண்ணாசை எண்ணம் கொண்டோ வந்திருந்தாலும், அவர்களால் தமிழுக்கு விளைந்த நன்மை மிகுதி. வாழ்க அவர்கள் தொண்டு. ஐரோப்பியர்கள் வராதிருந்தால் தமிழகம் எப்படி இருக்கும்? ஒரு கணம் நினைப்போம். நம் மொழியும் பண்பாடும் எங்கோ அழிந்து நாம் எப்படியெப்படியோ செப்பிடு வித்தைகளால் சீரழிந்திருப்போம். நம் பெருமையைக் காக்க மொழி வளத்தைப் புதுப்பிக்க வந்தனன் அயலான் வாழியவே தமிழ்.

மரம் நடும் மறத்தமிழர் மரபு

தெய்வத்தொண்டைக் காட்டிலும் மேன்மைமிக்கது தேசத்தொண்டு. சிறுபஞ்சமூலம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். சிறுபஞ்சமூலம் என்பது, கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி முதலிய ஐந்து பொருள்களின் கலவை என்பர். இம்மருந்துகள் மக்களின் உடல் நோயைப் போக்குவது போல், சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மக்கள் மனதைச் சுத்தம் செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பொருள்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கும்.

“”வார் சான்ற கூந்தல் வரம்பு உயர; வைகலும் நீர் சான்று உயரவே நெல் உயரும்: சீர்சான்ற தாவாக் குடி உயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும் ஓவாது உரைக்கும் உலகு”. இப்பாடலின் கருத்து: நீண்ட கூந்தலை உடைய பெண்ணே நிலத்திலே நீர் தங்கும் படியாகக் கரை உயர்ந்திருக்க வேண்டும், கரை உயர்ந்து காணப்பட்டால் தான் குளத்திலே நீர் தேங்கி இருக்கும். நிலத்தடி நீர் குறையாது. தண்ணீர் தேங்கி இருந்தால் தான் வேளாண்மைப் பயிர் செய்ய முடியும். நெற்பயிர் ஓங்கி செழித்து வளர்ந்தால் தான் குடிமக்கள் யாவரும் பஞ்சம், பசியின்றிப் பல
செல்வங்கள் பெற்றுச் செழுமை யுடன் வாழ்வார்கள். நாட்டின் குடிமக்கள் சிறந்து வாழ்ந்தால் தான் அந்நாட்டு மன்னனும் உயர்வாக மதிக்கப்படுவான், அவனது அர சாட்சியும் சிறந்து விளங்கும் என்பதாகும்.

தரிசு நிலங்களைத் திருத்தி, கழனிகளாக்கி நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தான் அந்நாட்டில் பஞ்சம் என்பதே இருக்காது. மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள். அதனால், காடுகளை அழித்து விடக்கூடாது. அவற்றைப் பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்று நமது பழந்தமிழ் இலக்கியங்களிலே  சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும் அக்குழந்தையின் நினைவாக ஒரு மரம் நடுவது நமது தமிழ்நாட்டின் மரபாகவே இருந்து வருகிறது.

தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். திருமண நாளில் உதிமரம் நட்டு வளர்ப்பதும்,  ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் நாளில் ஐந்து பால்தரும் மரங்களை நட்டுப் பயிர் செய்ய வேண்டும் என்பதும் நம் தமிழரின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. புலவர் காரியாசான், நாடு நன்றாக வாழ, நாட்டிலே நீர்வளம் குறையாது உணவு உற்பத்தி பெருக, மக்கள் மகிழ்வோடும் ஒற்றுமையோடும் வாழ நல்ல கருத்துகளை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடியிருப்பது போற்றத்தக்கதாகும்.

“குளம் தொட்டுக்கோடு பதிந்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி
வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு,
என்று இவ்ஐம்பால் படுத்தான் ஏகும் சுவர்க்கத்து இனிது” (பா66).

“நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடில் லாமல் இருக்க பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும். (நீர்ப்பாசனம்):தளிர்விட்டு வளரக்கூடிய மரக் கிளைகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். (பசுமைப்புரட்சி), மக்கள் நடக்க முள்<<<, முடல் இல்லாத பாதைகளை மேடு பள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும். (சாலை வசதி), தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி விளைநிலங்களாக மாற்ற வேண்டும். (தரிசு நில மேம்பாடு); சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும். (குடிநீர் வசதி), இந்த ஐந்து அறப் பணிகளையும் தேசத்திற்காக எவன் செய்கிறானோ அவன் சொர்க்கம் சென்றடைவான்’ என்கிறது சிறுபஞ்சமூலப் பாடல்.
சிறுபஞ்சமூலம் கூறும் இக்கருத்துகள், இந்நாளில், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துகள் தானே?
(செய்தி ஆதாரம்  07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் கா.காளிதாஸ் என்பவர் எழுதியுள்ளார்)

முப்புள்ளி எழுத்தின் மூலம்

உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரி வடிவ எழுத்து தோன்றியது. “அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. “அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துக்கள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர் மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் “தனிநிலை’ எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளி களாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
வழக்காற்றில் இதை “ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். “ஆயுத’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்துவகைச்
சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத் திரையாக ஒலிக்கும்பொழுது “ஆய்தக்குறுக்கம்’ என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது  (முள்+தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும் பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னேருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாக கருவி எனப்பொருள்படும். ஆயினும், போர்க்கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர் பெற்றது. போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின்  வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு வட்டவடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத் தில் கைப்பிடி இருக்கும். மறு பக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும்.
இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டு வதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப்பெற்றது.

“போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகளில் சூலமும் ஒன்று, சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும்.  அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்துகொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து ஃ, ஆய்தம் எனப்பெயர் பெற்றது’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டுள்ளேன்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. (செய்தி ஆதாரம்  07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் புலவர் ம.நா.சந்தானகிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார்)