Archive for the 'புறப்பொருள் வெண்பாமாலை' Category

தமிழரின் வீரமும் உழைப்பும்

தமிழரின் வீரமும் உழைப்பும்

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த  வயங்கிருள் கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி!
இது புறப்பொருள் வெண்பாமாலை பாடல்.
தமிழர்கள் உலகின்  மிக மூத்த வீரம் மிகுந்த குடிகள் என்பது இப்பாடலின் பொருளாகும். இதுவெறும் பொய்யுரையோ, புனைந்துரையோ கிடையாது.  தமிழர்கள்  வீர மரபினர் (Martial race). தமிழர்களின் வீரத்தை  புகழ்ந்து  பேசும்  பழந்தமிழ் நூல்கள் பல உள்ளன.
வீரத்தையும், காதலையும் தமிழர்கள் இரண்டு கண்களாகவே போற்றி வந்தனர்.  இவை இரண்டும் தமிழர் பண்பாட்டின் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.
 அதனால் தான் தமிழர்கள்  தங்கள் வாழ்க்கையை  அகவாழ்க்கை (தலைவன், தலைவியின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை) புறவாழ்க்கை (வீரத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கை) என்று பகுத்தனர்.  இதனை அகநாநூற்றுப் பாடல்களும், புறநாநூற்றுப் பாடல்களும் விரிவாக எடுத்துரைக் கின்றன.
மானத்தோடு வாழ்வதுதான் வீர வாழ்க்கை. மானத்திற்கு பங்கம் ஏற்பட்டால்  உயிரையும் துறந்து விடுவது தமிழ் மரபு.  இதனை பின்வரும்  குறட்பா தெளிவாக எடுத்துரைக்கிறது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(பொருள்: மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமானைப் போன்ற குணமுடையோர்கள். மானத்தைக் காக்க வேண்டி உயிரையும் இழப்பாரே தவிர மானத்தை இழக்க மாட்டார்கள்.)
வீரம் மிகுந்த தமிழர்கள் நல்ல உழைப்பாளிகளும் கூட, இந்தியாவில் வாழும் பல்வேறு இன மக்களில் மிக அதிக உலக நாடுகளில் பரவி வாழ்பவர்கள் தமிழர்கள் தான். அந்த வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
மேலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், சூரினாம், தென்னாப்பிரிக்கா, மாலத்தீவுகள் மொரிசீயஸ் போன்ற நாடுகளில்  காடு, கழனிகளை திருத்தி வேளாண்மை சிறக்க பாடு பட்டவர்கள் தமிழர்களே.  அதுமட்டுமின்றி  இங்கெல்லாம் நெடிதுயர்ந்த கட்டிடங்கள் எழும்ப தங்கள் உழைப்பை அளித்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்தநாடுகளின் வரலாறே எடுத்துக் கூறும்.