Archive for the 'சமயம்' Category

திருமூலர் உரைத்த மந்திர மொழிகள்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்’
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
இதனை எல்லோரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை கண்கூடாக காண்கிறோம்.

இந்த மந்திர மொழிகளை உரைத்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் ஆவார். அவருடைய திருமந்திரத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த இனிய மொழியை அறிஞர் அண்ணா மிக அருமையாகக் கையாண்டார்.

சித்தர்கள் மானுடத்தை அறிந்து சித்தி பெற்றவர்கள். அவர்களில் திருமூலர் முதன்மையான சித்தர்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே’ என்ற திருமந்திர வரிகள் மூலம் ஆன்மீகத்துடன் அவருக்கு தமிழ்மொழியின் மீதும் பற்று இருந்தது புலப்படுகிறது.

தமிழை நன்கு கற்றுத் தேர்ந்த அவர் இறைஞானத்திலும் தெளிவு கொண்டவர். அதனால்தான் சமத்துவத்தை வலியுறுத்தும் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு எடுத்துரைத்தார்.

இறை ஞானத்தின் மூலம் எல்லோரும் இன்பம் பெற வேண்டும் என்பதையும் அவர் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று கூறுகிறார்.

“அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
 அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே’

மற்றும்,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

 போன்ற மிகச்சிறந்த மந்திர மொழிகளைப் படைத்துள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களை எழுதியதாகக் கூறப்படுகிறது.  அதன் காரணமாக திருமூலர் தான் எழுதிய நூலுக்கு “தமிழ் மூவாயிரம்’ என்றே பெயரிட்டார். பின்னர் இதற்கு திருமந்திரம் என்ற பெயர் ஏற்பட்டது. இது சைவத் திருமுறைகள் பன்னிரெண்டில் பத்தாவது திருமுறையாகும்.