நாணத்தை பறித்து விடும் காதல்

 காதல் இன்பத்துக்கு இணையானது ஏதுமில்லை. நம் மீது அன்பு செலுத்தவும் நம் மீது அக்கறைப்படவும் நம்மை பாதுகாக்கவும் இன்னொரு உயிர் இருக்கிறது என்றால் அதை விட இன்பம் தருவது வேறேதாவது இருக்க முடியுமா என்ன? காதல் இன்பமானது மட்டுமல்ல சக்தி வாய்ந்ததும் கூட. காதலி, காதலனுக்கு கடைக்கண்ணை காட்டி விட்டால் அவனுக்கு மாமலையும் ஒரு கடுகாகத்தான் தோன்றும் என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருப்பதும் இதனால்தான்.

தமிழர்களின் பண்பாட்டில் காதலுக்கும், வீரத்துக்கும் முக்கிய இடம் உண்டு. அவையிரண்டும் நம் பண்பாட்டின் பிரிக்க முடியாத இரு முக்கிய கூறுகள். சங்க இலக்கியங்கள் காதலை புகழ்ந்து பேசுகின்றன. பாடல் நடை, சொல்லாடல்கள், பாடு பொருள், யாப்பு, ஓசை நயம், உவமைகள், கவிதை உருவாக்கம், கற்பனைக் காட்சிகள், வாக்கிய ஒழுங்குகள் என பல்வேறு வகையிலும் சங்கப் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என தமிழறிஞர்கள் பாராட்டி கூறுகின்றனர். அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அப் பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ்கின்றன.

இத்தனைக் காலமும் தமிழறிஞர்களின் வாயிலே வந்து நாவிலே நின்று அவை தமிழ் மணத்தை பரப்பிக் கொண்டிருக் கின்றன. காதலின் முன் எதுவும் குறுக்கே நிற்க முடியாது. பெற்றோரைக் கூட காதலர்கள் துச்சமாக தூக்கியெறிந்து விடுவதை கண்கூடாகக் காண்கிறோம். காதல் வயப்பட்ட ஒரு பெண் இருபது, முப்பது ஆண்டுகள் பெற்று வளர்த்து ஆளாக்கி பாதுகாத்த தாய், தந்தையரைக் கூட ஒரே நாளில் உதறி விட்டு நேற்று வந்த காதலனுடன் செல்வதை காண்கிறோமா இல்லையா? பெற்றோர் மீது அந்த பெண்ணுக்கோ, ஆணுக்கோ பாசமில்லை என்று கூறி விட முடியாது. அதனை விட காதல் சக்தி வாய்ந்தது; பாசத்தை விட காதல் பெரிது என்று தான் கருத வேண்டியுள்ளது. காதலைப் போலவே அதனை எடுத்துரைக்கும் எந்த ஒரு கலை வடிவமும் அது திரைப்படமானாலும் சரிதொலைக்காட்சி தொடரானாலும் சரிகதையானாலும் சரிகவிதை யானாலும் சரி சுவையானதுதான்.

காதலின் ஈர்ப்பு சக்தியே இதற்கு காரணம் என்று கூறலாம். அதிலும் சங்கப் பாடல்களில் காதலை எடுத்துரைப்பது தனிச் சிறப்பானது. நான்கைந்தே வரிகளில் செவ்விய முறையில் காதல் உணர்வை கூறும் பாங்கு, அப்பப்பா! எவ்வளவு சுவையானது? சங்க காலப் பெண் புலவர்களில் ஒளவையாருக்கு அடுத்ததாக அதிகமாக அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே காண்போம். காமத்தையும் (காதல்) உயிரையும் இணைத்து கபிலர் “”உயிர்தவத் சிறிது காமமோ பெரிதே” என்று கூறியுள்ளார். ஆனால் வெள்ளிவீதியாரோ காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.
இனி பாடலை காண்போம் வாருங்கள்.

“””அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)

இதன் பொருள்: நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
காதலை கவிநயத்துடன் எடுத்துரைக்கும் சங்கப் பாடல்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் இப்பாடலும் சுவையானது. அழகான ஒப்புமை இப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. காதலைப் போலவே அதன் சிறப்பையும் அதனால் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும் உணர்வுகளையும் கூறும் இது போன்ற சங்கப் பாடல்கள் என்றென்றும் நமக்கு இலக்கிய இன்பம் தருவதாகும்.

0 மறுவினைகள் to “நாணத்தை பறித்து விடும் காதல்”



  1. பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக