Archive for the 'தமிழில் நாட்குறிப்பு' Category

தமிழில் நாட்குறிப்பு முன்னோடிகள்

வரலாற்றில் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தனியிடம் உண்டு. 18ம்  நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இவரது பெயரைச் சொன்னதுமே இவர் எழுதிய நாட் குறிப்புகள் தான் நம் நினைவுக்கு வரும்.
நாட்குறிப்பு எனும் வகையில் தமிழில் கிடைத்திருக்கும் முதல் நாட்குறிப்பு இது தான். அது மட்டுமல்ல இந்திய மொழிகளில் கிடைத்த முதல் நாட்குறிப்பும் இவருடைய தமிழ் நாட்குறிப்பே என்று கூறப்படுகிறது.

அந்த வகையிலும் தமிழுக்கு பெருமை சேர்கிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை மட்டும் தெரிவிக்காமல் அக்கால தொழில், வாழ்க்கை, அன்றைய அரசியல், வாணிபம், கல்வி, ராணுவ நடவடிக்கைகள், மக்கள் பிரச்சனைகள், சமுதாய நிலை, வெள்ளையர் மற்றும் பிரெஞ்சு ஆட்சி முறை நிகழ்வுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றுப் பெட்டகமாக திகழ்வதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழில் தனியாக உரை நடை இலக்கியம்  வளரவில்லை. 20ம் நூற்றாண்டில் தான் தமிழ் உரை நடை வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த வகையில் தமிழில் புதுமை புகுத்திய முதல் நாட்குறிப்பேட்டாளரான இவரது நாட்குறிப்பு தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது என்று வரலாற்று அறிஞர்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.

1736 முதல் 1761 வரை புதுச்சேரியில் நடந்த நிகழ்வுகளை ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவர் தனது நாட்குறிப்பை 6.9.1736 ம் தேதி முதல் எழுத தொடங்கி உள்ளார்.

இவருடைய நாட்குறிப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறவில்லை இடையிடையே விட்டுப்போயுள்ளன. ரங்கபிள்ளை இறந்து ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து தான் அவை அச்சிடப்பட்டு வெளிக்கொண்டு வரப்பட்டன.

இவரது நாட்குறிப்பு 29 தொகுதிகளாக அரசு ஆவணங்களாக இருந்து போதிலும் இவற்றை யாவரும் படிக்க இயலாத நிலை உள்ளது. ஆயினும் இவற்றின் ஆங்கில மொழியாக்கம் உலகெங்கும் புகழ்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இவரது நாட்குறிப்புகளின் மூலச்சுவடுகள் உள்ளன.

ஆனந்தரங்கம் பிள்ளை 30.03.1709 அன்று சென்னை பெரம்பூரில் பிறந்தார். 1716ம் ஆண்டு இவரது குடும்பம் பாண்டிச்சேரி குடிபெயர்ந்தது. இவர் 1747ம் ஆண்டு பிரெஞ்சு அரசின் அரசவைப் பதவியான துபாஷ்ஆக (இரு மொழி வல்லுநர்) நியமனம் ஆனார். 1756ம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டார். 12.1.1961ல் ரங்கபிள்ளை புதுச்சேரியில் இறந்தார். பிரெஞ்சு அரசவையில் உயர்ந்த கவுரவத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் சுமார் 25 ஆண்டுகள் எழுதி வைத்த நாட்குறிப்புகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தேசிய நூலகத்தின் தமிழ் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனந்தரங்கம் பிள்ளையை தொடர்ந்து அவரைப் போன்றே நாட்குறிப்புகள் எழுதியவர் திருவேங்கடம்பிள்ளை. இவர் ஆனந்தரங்கம் பிள்ளையின் இளைய சகோதரரின் மகன் ஆவார். இவரது நாட்குறிப்புகள் யாவும் காகிதத்திலே தான் உள்ளன.
1762 முதல் 1764 முடிய இரண்டு தொகுதிகளாக இவரது நாட்குறிப்புகள் சுமார் 473 பக்கங்களில் உள்ளன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவர்களைத் தவிர நெல்லை            சவரிராயபிள்ளை 1836 முதல் 1874 வரை தமிழில் எழுதி வந்த நாட்குறிப்புகளும், கடிதங்களும் நாட்குறிப்பு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.

அடுத்தது ஆற்காடு நவாப் முகமது அலி எழுதி உள்ள நவாப் வாலாஜா நாட்குறிப்புகள். இவை பெர்சிய மொழியில் உள்ளது. இவரது ஆட்சிக்காலம் 1749 முதல் 1795 முடிய ஆகும். மேலும் ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதியின் நாட்குறிப்பும் 1866 முதல் 1903 வரை எழுதப்பட்டுள்ளது.