“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்’
உலகம் எப்படி தோன்றியது என்பதை சங்கப் பாடலின் இந்த இரண்டே வரிகள் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றன.
14ம் நூற்றாண்டில் தான் வானவியல் விஞ்ஞானி கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதை ஆய்வு பூர்வமாக எடுத்துரைத்தார். நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது. இந்த உண்மைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
இதன் மூலம் பன்னெடுங்காலத்துக்கு முன்பே ஆழமான அறிவியல் ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் உலகம் கருதுகிறது.
உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை
“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை’ என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது.