Archive for the 'திருமந்திரம்' Category

சிவனைக் காட்டிய சித்தர்

உலகம் முழுவதும் தோன்றிய சமயச் சான்றோர்களில் காலத்தால் மூத்தவராகக் கருதப்படுபவர் திருமூலர்.
 இவரது காலம் கி.மு. ஆறாயிரம் என்று நம்பப்படுகிறது.  இவர் மூவாயிரம்  ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு  பாடல் வீதம் மொத்தம் மூவாயிரம் பாடல்கள் எழுதியதாக கருதப்படும் இவரது நூல் திருமந்திரமாகும். அறுபத்து  மூன்று நாயன்மார்களில்  ஒருவரான இவர், பதினெட்டு சித்தர்களில் ஒருவருமாவார்.
இதிலெல்லாம் இவரது தனித்துவமில்லை.  கடவுளுக்கு இவர் சொன்ன விளக்கம் தான் மற்றவர்களில் இருந்து இவரை உயர்த்திக் காட்டுகிறது.
“அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
என்பதே திருமூலரின் கருத்து.
 உலகத்தில் வேறு எந்த ஞானியாவது இவரைப் போல கடவுளைப் பற்றி இவ்வளவு அருமையாகச் சொல்லி யிருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
அன்பு தான் கடவுள்; அன்பு தான் சிவன் என்று இரண்டே சொற்களில் மிக எளிமையாகவும், எல்லோருக்கும் புரியும் வகையிலும் கூறியவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே
என்ற பாடலில் அன்பு இல்லாதவர்கள் இறைவனை அடைய முடியாது என்று திருமூலர் கூறுவதையும்  எண்ணிப் பார்க்க வேண்டும்.
கடவுள் என்றால் இப்படி இருப்பார்; அப்படி இருப்பார்; இவர் தான் கடவுள்; அவர் தான் கடவுள் என்றெல்லாம் சமயச்சழக்குகளுக்கும், சண்டைகளுக்கும் இடம் தராமல் உயர்வு, தாழ்வு கற்பிக்காமல் அன்புதான் கடவுள் என்று சொன்ன ஒரு பெரும் ஞானி இவர். இன்று  வரையிலும்  இதற்கு மாற்றான ஒரு கடவுள் தத்துவத்தை  யாராகிலும் சொல்ல முடியுமா? அல்லது  இவரது கருத்தை மறுக்கத்தான் முடியுமா?
கடவுள் பற்றிய தத்துவ விசாரணை களையும், பல்வேறு விளக்கங் களையும் தந்து மக்களைக் குழப்பாமல் நேரடியாக அன்பு நெறியை  இறைவனாகக் காட்டிய மிகப்பெரிய  ஞானி இவர்.
அது மட்டுமல்ல, உடலுக்கு அழிவுண்டு; உயிருக்கு அழிவு இல்லை என்று பல சமய பெரியோர்கள் கூறுவதில் இருந்தும் இவர் வேறுபட்டு நிற்கிறார்.
உடம்பார்  அழியின் உயிரார் அழிவார்..
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்பது இவரது பாடல். இதன் மூலம் உடம்பு இருந்தால் தான் உயிர் இருக்கும் என்பதை  ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார்.
 உடம்பினை முன்னர் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்ட டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
 என்ற இவரது பாடல் மனம் கொள்ளத்தக்கது.
இப்படிப்பட்ட தனித்துவமான கருத்துகளால் தான் சமயத்துறையில் திருமூலருக்கு எப்போதும்  தனி இடம் உண்டு.  அது உலகம் இருக்கும் வரையிலும் மாறாது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் சமயத்துறையிலும் தமிழினம் தலைசிறந்து விளங்குவது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும்.