Archive for the 'தமிழர் நீர்ப்பாசனம்' Category

காலத்தால் மூத்த கல்லணை

நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர் முன்னோடி என்ற உண்மையை கரிகாலன் கட்டிய கல்லணை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையை இங்கே காண்போம்.(உண்மை ஜனவரி 1631/2010 இதழில் முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன்  எழுதிய கட்டுரையை நன்றியுடன் இங்கே அறியத்தருகிறோம்.)சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு நூல்கள் புகழ்ந்து உரைக்கின்றன.
 கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது அவன் கட்டிய கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக்கொண்டிருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை. பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப்பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழநாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான   காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ வேந்தன் . இந்தக் காவிரிப் பெண்  எங்கு பிறந்து, எங்குத் தவழ்ந்து வருகிறாள் என்று கொஞ்சம் மேற்கே திரும்பிப் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் தலைக்காவிரி என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகி 384 கி. மீ. தூரம் பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூரை அடையும் காவிரி ஓர் இடத்தில் ஆடு தாண்டும் அளவுக்குத் தன்னை ஒடுக்கிக்கொள்கிறது. இந்த இடத்திற்குப்பெயரே மேக் தாட்டு (ஆடு தாண்டி).
 ஒகேனக்கல்லிலிருந்து பவானி வரை காவிரி தெற்குத் திசையில் ஓடுகிறது. உதகைக்குத் தென்மேற்கே நீலகிரி மலையில் கடல் மட்டத்துக்குத மேல் 8000 அடி உயரத்தில் பிறக்கும் பவானி ஆறு. பவானி ஊருக்கு தேற்கே காவிரியில் கலக்கிறது. பவானியும், காவிரியும்  கூடுமிடம் மேட்டூர் அணைக்கு 80 மைல் தெற்கே இருக்கிறது.
 இதன் பின், காவிரி கிழக்குத் திசையில் நொய்யலும், அமராவதியும் காவிரியில் சேர்கின்றன. கோவை மாவட்டத்தில் நொய்யலும், மூணாறு பகுதியிலிருந்து அமராவதியும் உருவாகின்றன. இப்பொழுது  காவிரி நன்கு  விரிந்து அகன்ற காவிரியாகிறது.இப்படி வெள்ளத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளத்தையும் அள்ளிக்கொண்டு ஆழ்ந்து அகன்று வரும் காவிரிக்கு அன்று அணை கட்டிய அற்புதத்தைச் செய்தவன் சோழ நாட்டுத்தமிழ்த் தலைவன் கரிகாலன்.வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்கே கல்லணைக்கருகில் காவிரியின்  அருகே வருகிறது.
 கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒரு வித இணைப்பு ஏற்படுகிறது.
 ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்து விட்ட காவிரியும் இயற்கை விதியின் படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான்  திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால் கத்தே.திருவால்கத்தின் மேல் முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது.  மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொழுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டார் தான். வெள்ளம் வரும் போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தை கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள்.
 அப்படியானால், அணை என்பது அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கரிகாலன் கட்டிய புகழ் பெற்ற அணையாகும். காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது.
காவிரி உயர் மட்டம், கொள்ளிடம் பள்ளம், கரிகாலன் கல்லணை கட்டுவதற்கு முன், காவிரி தன் வடகரையை உடைத்துக்கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டுஇருந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் வியப்பை ஏற்படுத்துகிறது.காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான். அக்கற்கள் உள்ளளவும் காவிரி உள்ளளவும் நிலைத்திருக்கும் படி அணையைக் கட்டினான்.
 கீழே காவிரியிலும்  அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன்.
 ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையை கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக் கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது. கல்லணை கட்டுவதற்கு இருந்திருக்கக் கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் “”நீரொழுங்கி” மதகுகள் அமைத்தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று.
கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொழுங்கி கட்டினார்கள்.
கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண் டாயிற்று. கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு கல்லணை மணற் போக்கிகள் வழியாக தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது.
பின்னர், 1934ல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலை மதகுக்காக வெண்ணாற்றுத் தலைமதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொழுங்கி அமைத்தனர். இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவுஅடைந்துள்ள  கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன.
 கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும் கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன.
கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழனாறு  என்று பிரிந்து கொண்டே போகிறது.
 கல்லணையிலேயே பிரிந்து வெண்ணாறும்,  வடவாறும், வெட்டாறு, வெள்ளையாறு, கோவையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3ஆயிரம் சதுர மைல் பகுதியை செழிக்கச் செய்து விட்டு கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன: சேர்ந்து இனி பயன்படுத்த முடியாது என்றுள்ள கடைக்கோடி  கழிவு நீரையும் மழை தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை எல்லாம் திருவெறும்பூர் பகுதியில் இருந்து கரிகாலன் கொண்டுவந்து கட்டினான் என்று கூறுகின்றனர்.