Posts Tagged 'அவ்விய நெஞ்சத்தான்….'

முப்பால் அறிஞரின் சமூக அக்கறை

“அவ்விய செஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்’
(பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.)

எந்த ஒரு சமுதாயத்திலும் கேடுகளும், தீங்குகளும் மலிந்தே கிடக்கின்றன. நல்லவர் என்பதாலேயே ஒருவர் வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கான சூழ்நிலைகளும், நியதிகளும் சமூகத்தில் இருந்தால்தான் நல்லவர்களுக்கு மதிப்பு இருக்கும்.
கேடுகள் நிறைந்த சமூக நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. வள்ளுவர் காலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல போலும். இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற வள்ளுவர் அதற்காக வருந்தியுள்ளார். அவருடைய வேதனையின் வெளிப்பாடுதான் மேற்காணும் குறளாக வடிவெடுத்துள்ளது.
அறக்கருத்துக்களை சொல்லி வெற்று உபதேசியாக மட்டும் அவர் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானியாக வள்ளுவர் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய குறைபாட்டை தனது பாடலில் பதிவு செய்து அதற்கான ஆய்வை மேற்கொண்டு சமூகத்தை திருத்த வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த குறட்பா மூலம் புலனாகும் ஆழமான அவரது சமூக நலன் நாடும் வேட்கையையும், ஆய்வு மனப்பான்மையையும் சமூகவியலாளர்கள் வியந்து போற்றுகிறார்கள்.
1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் வகையில் தனித்துவமானதுதான். அவற்றிலும் ஒரு சில குறட்பாக்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிந்தனைச் செழுமையில் வேறுபட்டு தனித்து மிளிர்கின்றன. அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த குறட்பா.
வள்ளுவர் நீதிநூல் மட்டும் எழுதியவர் அல்ல. அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அந்த உண்மையை இந்தக் குறட்பா பதிவு செய்து வைத்துள்ளது. அதன் ஆழமான பொருளை நுணுகி ஆராய்ந்து படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.